டெல்லி, நவ.25
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறிவிட்டது. தமிழக கடலோர பகுதியில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னைக்கு அருகே 470 கி.மீ தொலையிலும், புதுச்சேரிக்கு அருகே 410 கி.மீ. தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. நிவர் புயல் மேற்கு தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழக கரையை நெருங்கி வருகிறது. மேலும் புயல் கரையை நோக்கி மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நிவர் புயல் நெருங்கி வரும் நிலையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் காரைக்கால், நாகையில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள், மீனவர்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துறைமுகம் வழியாகவோ அல்லது அதன் அருகிலோ புயல் கரையை கடக்கலாம் என்பதே 7ஆம் கூண்டு எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி அருகே காரைக்கால்,- மாமல்லபுரம் இடையே புயல் இன்று கரையை கடக்க உள்ளது. சென்னை, திருவள்ளூர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படும்: வானிலை ஆய்வு மையம் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள நிவர் புயல் தற்போது தமிழகம் மற்றும் புதுவையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த புயல் மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கலாம் என்றும் இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெரும் சேதங்கள் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதற்காக பேரிடர் மற்றும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என்பதும் தமிழக மின்சாரத்துறை புயலால் ஏற்படும் சேதத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழக அரசு இன்று அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. புயல் கரையை கடந்து முடிக்கும் வரையிலும், கரையை கடந்த பின்னரும் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிவர் புயலால் ஏற்படும் சூறாவளி காற்றினால் எந்தெந்த மாவட்டங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிவர் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவாரூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் நிவர் புயல் கரையை கடக்கும்போது எந்த காரணத்தை முன்னிட்டும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
